Pages

Sunday 8 July 2012

கவிதை


காதல் செய்த மாயம்
காகிதங்கள் கல்லானால்
என் பேனாவும் உளியாகி
கவிதைகளை செதுக்க முயற்சிக்கிறது
உன் காதல் என்னுள் நுழைந்த மாயம்தானோ?

காதல் கைதி
உன் காதல் விலங்கால் என்னைக் கைது செய்து
உன் இதயச்சிறையில் அடைத்தாலும்
ஆயுள் கைதியாய் வாழ்ந்திடவே ஆவல் தான் கொண்டேனடி...

காதலியே
நெஞ்சைவிட்டு நீங்கா ஓவியமாய் உன் நினைவுகள்
கொஞ்சகொஞ்சமாய் என்னை கொல்லுதடி
உன் விழிஈர்ப்பு விசைதான் என்னவோ
உன் வழிதேடி எனது இதயம் தொடருதடி
நீ கடந்து செல்லும் பாதையில்
நம் வருங்காலம்
என் கண்முன் நிழலாய் நெஞ்சில் ஓடுதடி
உன்னைக் காணும் ஒருநொடியே
என் வாழ்வின் ஆயுளாய் போதுமடி
விழிகள் இணைத்த நம் இதயங்களை
விதியென்று கூறி விலக்குவது சரிதானோ?

திருந்திடு
என் பேனா முனைகள் வடிப்பது
எழுத்துக்களையல்ல கண்ணீர்த்துளிகளை...
மதுவென்றும் மாதென்றும்
மதிமயங்கிச் சீரழியும்
கேவலங்கள் நீங்க வேண்டும்.
பச்சிளம் சிறுமியையும்
பலியெடுக்கும் காமுகன்களால்
பரிதவிக்கின்றது என் தேசம்.
தத்தித்தத்தி நடை பயிலும்
சுட்டிப்பிள்ளை கண்ட போதும்
எட்டிப்பார்க்கும் கோரக்கண்கள்
தட்டிக்கேட்க யாருமுண்டோ?
எண்ணிடவும் முடியாத
அவலங்கள் கொடுமைகள்
கண்முன்னே காண்கையிலே
கதறியழும் என் உள்ளம்.
இணையமென்றும், கைப்பேசியென்றும்
இருக்குமிடமெல்லாம் ஆபாசங்கள்
இவைகள் தினமும் கண்டு கண்டு
காட்டாற்று வெள்ளமாய் இளைய சமுதாயம்.
சட்டங்கள் பல இருந்துமென்ன
குற்றங்கள் இங்கே குறையவில்லை.
தண்டிக்க யாரும் தேவையில்லை
உன் மனசாட்சி ஒன்றே போதும்.
இறைவன் என்ற நீதிபதியின்
தீர்ப்பு ஒரு நாள் உன்னைத்தேடும்
அன்று வருந்தியழுதல் பயனோ
இன்றே திருந்தி வாழ்தல் நலமே.



0 comments:

Post a Comment