Pages

Wednesday 25 July 2012

செய்தி குறிப்பு


பெட்ரோல் விலை லிட்டருக்கு 97 காசுகள் குறைப்பு

பதிவு செய்த நாள் - July 25, 2012 3:21 pm
இன்று காலை முதல் தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையைக் குறைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளதாக பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 97 காசுகளும், டீசல் விலை 12 காசுகளும், சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு 7 ரூபாயும் குறையும். அதேசமயம், புதுச்சேரியில் இந்த விலை குறைப்பால் பெட்ரோலியப் பொருட்களின் விற்பனை விலையில் எந்த மாற்றமும் இருக்காது எனத் தெரிகிறது.
பெட்ரோலிய எரிபொருட்களின் விலையைப் பொறுத்தவரை, ஒவ்வொரு மாநிலத்துக்கும் வேறுபடும் வகையிலான கூடுதல் வரி உள்ளதாகவும், அதை சீரமைத்ததின் விளைவாகவே இந்த விலை மாற்றம் நடந்துள்ளதாகவும், அதனால்தான் தற்போதைய விலை குறைப்பு  மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும் என்றும்  எண்ணெய் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விலை குறைப்பு குறித்த முடிவு மத்திய அமைச்சரவை மட்டத்தில் எடுக்கப்பட்டதாகவும், அது எண்ணெய் நிறுவனங்கள் மூலமாக பெட்ரோல் விற்பனை நிறுவனங்களுக்கு நேரடியாக தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியன் ஆயில் நிறுவன வட்டாரங்கள்  தெரிவித்தன.

2ஜி : சிதம்பரம், தயாநிதி மாறன் விசாரிக்கப்படாததற்கு நாடாளுமன்ற கூட்டுக் குழு கண்டனம்

பதிவு செய்த நாள் - July 25, 2012 11:42 am
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக மத்திய அமைச்சர் சிதம்பரத்தையும், முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனையும் ஏன் விசாரிக்கவில்லை என்று நாடாளுமன்ற கூட்டுக் குழு உறுப்பினர்கள் சிபிஐ அதிகாரிகளுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.
நாடாளுமன்ற கூட்டுக் குழு முன்பு நேற்று ஆஜரான சிபிஐ இயக்குனர் ஆர். கே. சிங்கிடம், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ ராசா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டதா என்று கேள்வி எழுப்பினர்.
மேலும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா, பிரதமருக்கு தவறான தகவல்களை அளித்தார் என்ற சிபிஐயின் வாதத்தை ஏற்க முடியாது என்றும், பிரதமருக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த தகவல்கள் முன்னதாகவே தெரிந்திருப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனுக்கு தொடர்புடையதாக கூறப்படும் லூப் டெலிகாம் மற்றும் ஏர்செல் மாக்சிஸ் வழக்குகளை விசாரரிக்க சிபிஐ ஏன் இவ்வளவு காலம் எடுத்துக்கொள்கிறது என்று பாரதிய ஜனதா உறுப்பினர் யஷ்வந்த் சின்ஹா கேள்வி எழுப்பினார்.
கடந்த 2001- ம் ஆண்டின் விலையிலேயே 2008 – ம் ஆண்டும் ஸ்பெக்ட்ரத்திற்கு விலை நிர்ணயம் செய்த சிதம்பரத்தை சிபிஐ இதுவரை விசாரிக்காதற்கும் உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஒலிம்பிக் விழாவில் பங்கேற்க கல்மதிக்கு அனுமதி மறுப்பு

பதிவு செய்த நாள் - July 25, 2012 8:08 pm
காமன்வெல்த் ஒருங்கிணைப்புக்குழுவின் முன்னாள் தலைவர் சுரேஷ் கல்மதி, லண்டனில் நடைபெறும் ஓலிம்பிக் தொடக்க விழாவில் பங்கேற்க டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.
லண்டன் ஒலிம்பிக்கில் கல்மதி பங்கேற்பது இந்தியாவிற்கு அவமானமாக அமைந்துவிடக்கூடும் என்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
நாளை மறுதினம் வரை இந்தியாவை விட்டு வெளியேற கல்மதிக்கு தடை விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தேசிய நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
லண்டன் ஒலிம்பிக் போட்டி தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு கல்மதிக்கு சர்வதேச தடகள சம்மேளனம் அழைப்பு விடுத்திருந்தது.
இந்நிலையில், ஒலிம்பிக் நிகழ்ச்சியில் பங்கேற்க கல்மதிக்கு தடை விதிக்கக் கோரி ராகுல் மெஹரா என்ற வழக்கறிஞர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
2010ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டி முறைகேட்டில் தொடர்பிருப்பதாகக் கூறி, சுரேஷ் கல்மதி காமன்வெல்த் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

0 comments:

Post a Comment