Pages

Tuesday 17 July 2012

வெஜிடபுள் பரோட்டா



 
  • உருளைக்கிழங்கு - 100 கிராம்
  • புடலங்காய் நறுக்கியது - அரை கப்
  • முட்டைக்கோஸ் - 100 கிராம்
  • தக்காளி - 2
  • அவரைக்காய் - 100 கிராம்
  • பீன்ஸ் - 100 கிராம்
  • கத்தரிக்காய் - 2
  • பெரிய வெங்காயம் - 2
  • பச்சை மிளகாய் - 3
  • கொத்தமல்லி - 2 கொத்து
  • புதினா - ஒரு கொத்து
  • காரட் - 100 கிராம்
  • இஞ்சி, பூண்டு விழுது - 1 1/2 மேசைக்கரண்டி
  • மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
  • கரம் மசாலா - 2 தேக்கரண்டி
  • கறி மசாலா தூள் - அரை தேக்கரண்டி
  • பட்டை - ஒன்று
  • ஏலக்காய் - ஒன்று
  • கிராம்பு - 2
  • சோம்பு - அரை தேக்கரண்டி
  • நெய் - ஒரு தேக்கரண்டி
  • மைதா மாவு - கால் கிலோ
  • எண்ணெய் - 2 மேசைக்கரண்டி + 1 1/2 தேக்கரண்டி
  • உப்பு - ஒன்றரை தேக்கரண்டி


உருளைக்கிழங்கு, காரட், கத்தரிக்காய், பீன்ஸ், அவரைக்காய், முட்டைக்கோஸ், பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். புதினா இலைகளை ஆய்ந்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதனுடன் நெய், 1 1/2 தேக்கரண்டி எண்ணெய், அரை தேக்கரண்டி உப்பு போட்டு தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசைந்து அரை மணிநேரம் ஊற வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் 2 மேசைக்கரண்டி ஊற்றி காய்ந்ததும் சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு 30 நொடி வதக்கவும்.
பிறகு அதில் வெங்காயம், தக்காளி, புதினா போட்டு 3 நிமிடம் வதக்கவும். அதில் இஞ்சி, பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை 2 நிமிடம் வதக்கவும்.
பச்சை வாசனை அடங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கறி மசாலா தூள் , கரம் மசாலா போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
அதில் நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளை போட்டு பிரட்டி விட்டு உப்பு போட்டு முக்கால் கப் தண்ணீர் ஊற்றி கிளறி 15 நிமிடம் மூடி வேக விடவும்.
இடையில் மூடியை திறந்து கிளறி விடவும். காய்கள் வெந்ததும் இறக்கி வைத்து விடவும். மேலே கொத்தமல்லி தூவவும்.
பிசைந்து வைத்திருக்கும் மாவை பெரிய எலுமிச்சை அளவு உருண்டையாக எடுத்து சப்பாத்தி கல்லில் வைத்து வட்டமாக தேய்த்து சப்பாத்தி கல் முழுவதும் படரும் படி தேய்க்கவும். மாவின் மேலே எண்ணெய் தேய்த்து, ஓரங்களைப் பிடித்து இழுத்து சப்பாத்தி கல்லின் ஓரங்களில் மடித்து விடவும். பிறகு அதில் செய்து வைத்த மசாலாவை வைக்கவும்.
மசாலா வைத்த பின்னர் அதை முக்கோணமாக மடிக்கவும்.
தோசைக்கல்லில் எண்ணெய் தடவி காய்ந்ததும் செய்து வைத்திருக்கும் வெஜிடபுள் பரோட்டாவை போட்டு மேலே எண்ணெய் ஊற்றி ஒரு நிமிடம் கழித்து திருப்பி போட்டு வெந்ததும் எடுக்கவும்.
சுவையான வெஜிடபுள் பரோட்டா தயார்.

0 comments:

Post a Comment